search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெட்ரோ ரெயில்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.
    • தேவையற்ற அரட்டை, பேச்சுகள் இடம் பெறுவதால் அதனை பெண் பயணிகள் வெறுக்கின்றனர்.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் 2 வழித்தடங்களில் தற்போது இயக்கப்படுகிறது. தினமும் சராசரியாக 3 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். நாளுக்கு நாள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது, டிக்கெட் பெறக்கூடிய கவுண்டர், உள்ளே நுழையக் கூடிய பகுதியில் நீண்ட வரிசையும் காணப்படுகிறது.

    ஒவ்வொரு மெட்ரோ ரெயிலிலும் 4 பெட்டிகள் உள்ளன. அதில் 3 பெட்டிகள் பொதுவானவை. ஒரு பெட்டி மட்டும் பெண்கள் பயணம் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் பெண்கள் பெட்டியில் பயணம் செய்து இடையூறு செய்வதாக புகார்கள் வருகின்றன.

    மெட்ரோ ரெயில் நிர்வாகம் பயணத்தின் போது மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணிக்கக்கூடாது என அறிவிப்பையும் வெளியிடுகிறது.

    ஆனாலும் சிலர் தெரியாமலும் ஒரு சிலர் தெரிந்தே அதில் பயணம் செய்வதால் பெண் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

    கல்லூரி மாணவர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள், ஆண்-பெண் ஒன்றாக மகளிர் பெட்டி யில் பயணம் செய்கின்றனர். இதனால் தேவையற்ற அரட்டை, பேச்சுகள் இடம் பெறுவதால் அதனை பெண் பயணிகள் வெறுக்கின்றனர்.

    மேலும் ரெயில் நிலையங்களிலும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக நின்று பேசுவது, உட்கார்ந்து இருப்பது போன்றவை தற்போது அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இளஞ்சிவப்பு படை (பிங்க் ஸ்குவாட்) தொடங்கப்பட்டு உள்ளது.

    பெண் பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இளஞ்சிவப்பு படையில் கராத்தே தற்காப்பு பயிற்சி பெற்ற பெண்கள் இடம் பெற்றுள்ளனர். 25 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் தற்காப்பு கலைகளில் பிரவுன் பெல்ட் பெற்றவர்கள். பெண் பயணிகளின் பாதுகாப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

    அவர்கள் ஒவ்வொரு ரெயில் மற்றும் நிலையத்திலும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுவார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்த ஆய்வின் அடிப்படையில் இளஞ்சிவப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் பெண் பயணிகளிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான பெண்கள் மெட்ரோ ரெயில் பயணம் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.

    ஆனாலும் சில இடையூறுகள் இருப்பதாக ஆய்வில் உறுதியானது. இந்த இளஞ் சிவப்பு படையிடம், பெண் பயணிகள் பாதுகாப்பு குறித்த புகார்களை தெரிவிக்கலாம். அவற்றை அவர்கள் உடனே சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என்று அதிகாரி தெரிவித்தார்.

    நந்தனத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் இளஞ்சிவப்பு பாதுகாப்பு படையை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் சித்திக் தொடங்கி வைத்தார்.

    • சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
    • இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் காத்திருப்பதாகவும் முதலமைச்சர் கவலையோடு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பாகவும், ஒப்புதல் அளிக்கும் நடைமுறையை விரைவுபடுத்திட வேண்டுமென்று கோரியும், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில், 50:50 என்ற சமபங்கு வீதத்தில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன என்றும், இதனடிப்படையில், 63,246 கோடி ரூபாய் செலவில், 119 கிலோமீட்டர் நீளமுள்ள மேலும் மூன்று வழித்தடங்களைக் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு (MOHUA) பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்பட்டதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் நிதிஆயோக் ஆகியவற்றின் பரிந்துரையுடன், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் நிதி ஒப்புதல்களும் இறுதி செய்யப்பட்டு அனுப்பப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இதற்குப் பிறகு, மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள், 21-11-2020 அன்று சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதாகத் தெரிவித்துள்ளார். 2021-2022 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கான எதிர் நிதியுதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னரும், 17-8-2021 அன்று பொது முதலீட்டு வாரியத்தால் (PIB) பங்கு பகிர்வு மாதிரியின் கீழ் மத்திய துறை திட்டமாக பரிந்துரைக்கப்பட்ட நிலையிலும், ஒன்றிய அரசின் ஒப்புதலை தமிழ்நாடு அரசு ஆவலுடன் எதிர்பார்த்ததாக தனது கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால், பிரதமர் அவர்களுடனான பல்வேறு சந்திப்புகளின்போது இது தொடர்பாக தான் வலியுறுத்தி வந்தபோதிலும், இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், இந்தத் திட்டத்திற்கான முன்மொழிவு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் காத்திருப்பதாகவும் முதலமைச்சர் கவலையோடு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    ஒன்றிய அரசின் ஒப்புதலை எதிர்பார்த்து, குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டம் முடிக்கப்படுவதை உறுதி செய்திட ஏதுவாக, இரண்டாம் கட்டப் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளதாகவும், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் இல்லாத நிலையில், ஒன்றிய அரசின் பங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மாநில நிதியில் இருந்து செலவினங்களை மேற்கொண்டு வருவதாகவும், இது பணிகளின் வேகத்தைக் குறைத்துள்ளதோடு, மாநில அரசுக்குக் கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் சென்னை மக்களின் இந்த கனவுத் திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த முடியும் என்றும் தனது கடிதத்தில் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டு, முதல் கட்டப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றிச் செயல்படுத்தியதைப்போல, 50:50 என்ற சமபங்கு வீதத்தில், ஒன்றிய மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணிகளையும் விரைந்து நிறைவேற்றிட ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • மெட்ரோ ரெயில் பயணிகளை மற்ற பொது போக்குவரத்துடன் இணைக்கும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னையில், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் 3 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.

    மெட்ரோ ரெயில் பயணிகளை மற்ற பொது போக்குவரத்துடன் இணைக்கும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    பயணிகள் இடையூறு இல்லாமல் ரெயில் நிலையங்களுக்கு செல்லவும் தடையின்றி மற்ற போக்குவரத்துகளுக்கு மாறவும் அதிகளவு பயணிகளை கையாளும் 22 மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூடுதலாக 41 நகரும் படிக்கட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. அண்ணா நகர், சின்னமலை, வண்ணாரப்பேட்டை, அரசு எஸ்டேட், ஈக்காட்டு தாங்கல், தேனாம்பேட்டை, ஐகோர்ட்டு, ஆயிரம் விளக்கு, மண்ணடி, பரங்கி மலை, தண்டையார்பேட்டை நிலையங்களில் தலா ஒரு நகரும் படிக்கட்டும், நேரு பூங்கா, எழும்பூர், நங்கநல்லூர் சாலை, கிண்டி, ஏ.ஜி.-டி.எம்.எஸ்., தியாகராயா கல்லூரி மற்றும் நந்தனம் ரெயில் நிலையங்களில் கூடுதலாக 2 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படும்.

    அண்ணாநகர் பூங்கா, நிலையத்தில் 3 நகரும் படிக்கட்டுகளும், வடபழனி மற்றும் மீனம்பாக்கத்தில் 4 நகரும் படிக்கட்டுகளும் திருமங்கலத்தில் 5 எஸ்க லேட்டர்களும் அமைக்கப்பட உள்ளன.

    இந்த மாதத்தில் பணிகள் தொடங்கி ஒரு வருடத்தில் நிறைவடையும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    கொரோனா பாதிப்புக்கு முன்பு மெட்ரோ ரெயில் பயணிகள் எண்ணிக்கை 1.16 லட்சமாக இருந்தது. இப்போது 2.73 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயணித்து வருவதால் இந்த வசதிகள் செய்யப்படுகின்றன. அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் முதலில் கான்கோர்ஸ் மற்றும் தெரு நிலைகளை இணைக்கும் வகையில் மேல் நோக்கி மற்றும் கீழ்நோக்கி நகரும் படிக்கட்டுகள் வடிவமைக்கப்பட்டன. ஆனால் திட்டச் செலவை மிச்சப்படுத்த கட்டடிடம்-1 கட்டும்போது அவை நிறுவப்படவில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • உயிரிழந்தவர் காரவால் நகரைச் சேர்ந்த வினோத் குமார்.
    • படுகாயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    டெல்லியில் உள்ள கோகுல்புரி மெட்ரோ ரெயில் நிலையத்தின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    இன்று காலை 11 மணியளவில் உயரமான ரெயில் நிலைய மேடையின் எல்லைச் சுவர் இடிந்து கீழே சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    விபத்தில் உயிரிழந்தவர் காரவால் நகரைச் சேர்ந்த வினோத் குமார் (53) என்பது தெரியவந்தது.

    இரு சக்கர வாகனத்தில் சென்ற காசியாபாத் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்தார். 

    மோனு, சந்தீப் மற்றும் முகமது தாசிர் ஆகிய மூவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் தற்போது உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்தை தொடர்ந்து, இரண்டு அதிகாரிகள் - ஒரு மேலாளர் மற்றும் ஒரு ஜூனியர் இன்ஜினியர் - இடைநீக்கம் செய்யப்பட்டதாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும், விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 5 லட்ச ரூபாயும் டெல்லி மெட்ரோ அறிவித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

    • 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
    • அடையாறு ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2 மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 2-ல் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதி மாதவரம் மில்க் காலனியில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ. தூரம் வரை அமைக்கப்படுகிறது.

    மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் சுரங்கப்பாதையாக பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 116 கி.மீ. தூரத்திற்கு இரண்டாம் திட்டப் பணிகளில் 42 கி.மீ. கட்டுமானத்திற்கு 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் 19 எந்திரங்கள் பல்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன.

    தி.நகர் மற்றும் கோடம்பாக்கம் போன்ற இடங்களில் களிமண் நிலம் இருந்தாலும் அடையாறு மற்றும் திருவான்மியூர் ஆகிய இடங்களில் பாறைகள் நிறைந்த பகுதியாகும்.

    இந்த திட்டப் பணியில் சில சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பாறை மண்ணின் வழியாக சுரங்கப் பாதைகளை அமைக்க இணைக்கப்பட்டு உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் அடையாறு ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2 மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது.

    தற்போது ஆற்றின் பாதி வரையில் சுரங்கம் தோண்டும் பணி முடிந்துள்ளது. மற்றொரு எந்திரம் சேத்துப்பட்டு ஏரிக்கு கீழே பல மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொள்ளும். கிரீன்வேஸ் ரோடு ஸ்டேஷன் முதல் அடையாறு சந்திப்பு நிலையம் வரையிலான 1.6 கி.மீ. தூரத்திற்கு அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் எந்திரம் இன்னும் 3 மாதங்களில் ஆற்றின் தெற்கு கரையை வந்தடையும் என்று மெட்ரோ ரெயில் திட்ட இயக்குனர் அர்ச்சுனன் தெரிவித்தார்.

    மேலும் ஒரு சுரங்கம் தோண்டும் எந்திரம் மெதுவாக ஸ்டெர்லிங் சாலையை நோக்கி முன்னேறி வருகிறது. ஸ்டெர்லிங் சாலையை அடைய 3 மாதங்கள் ஆகலாம். மற்றொரு எந்திரம் சேத்துபட்டு ஏரி வழியாக கீழ்ப்பாக்கம் நோக்கி சென்று ஒரு மாதத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான உயர்மட்ட பாதை வழித்தடத்தில் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
    • பூந்தமல்லி இடையேயான வழித்தடத்தில் உயர்மட்டப் பாதையில் மொத்தம் 811 தூண்கள் அமைக்க வேண்டும். இதுவரை 598 தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

    இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 26.1 கி.மீ. வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்டபாதையாகவும் அமைக்கப்படுகிறது.

    இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களும் அமைக்கப்படுகின்றன. தற்போது, உயர்மட்ட பாதை பணிகள், சுரங்கப் பாதை பணிகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் ஆகியவை முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இந்த வழித்தடத்தில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான உயர்மட்ட பாதை வழித்தடத்தில் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான வழித்தடத்தின் ஒரு பகுதியாக, கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் - பூந்தமல்லி இடையேயான வழித்தடத்தில் உயர்மட்டப் பாதையில் மொத்தம் 811 தூண்கள் அமைக்க வேண்டும். இதுவரை 598 தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள தூண்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    தூண்கள் அமைக்கப்பட்ட இடங்களில் உயர்மட்ட இரும்பு பாலம் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. ஆலப்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, சாலிகிராமம், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, பூந்தமல்லி ஆகிய இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இந்த வழித்தடத்தில் உயர்மட்டப்பாதையில் 18 ரெயில் நிலையங்களில் 13 ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தீவிர மடைந்துள்ளன. மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கான நுழைவு வாயில், வெளியேறும் பகுதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடைய வாய்ப்பு உள்ளது.

    இதையடுத்து பவர் ஹவுஸ்- பூந்தமல்லி இடையே உள்ள பாதையை மக்கள் பயன்பாட்டுக்காக, 2025-ம் ஆண்டில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழித்தடத்தில் அடுத்த ஆண்டு மெட்ரோ ரெயில் ஓடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் இரட்டை அடுக்கு பாதையில் கட்டுமானப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணிக்காக, கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில்நிலையத்தில் இருந்து முதல் சுரங்கம் தோண்டும் எந்திரமான 'பிளமிக்கோ' கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி பணியை தொடங்கியது. இதையடுத்து, 2-வது சுரங்கம் தோண்டும் எந்திரமான 'கழுகு' தனது பணியை கடந்த 18-ந்தேதி தொடங்கியது. இது கலங்கரை விளக்கத்தில் இருந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தொடங்கி, கச்சேரி சாலை, திருமயிலை, பாரதிதாசன் சாலை ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் வழியாக போட்கிளப்பை 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடைய உள்ளது.

    இதற்கிடையில், தி.நகர் பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் நோக்கி 'பிகாக்' என்ற எந்திரம் மூலமாக, சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. தற்போது, இந்த எந்திர பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பூமிக்கடியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை.
    • அண்ணாசாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் ரோடு x ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதிகளில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    * பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை x திரு.வி.க. சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

    * ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணாசாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் திரும்பி தங்களது இலக்கை அடையலாம்.

    * அண்ணாசாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் ரோடு x ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

    * அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை X திரு.வி.க. சந்திப்பில் இருந்து பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் இயக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டிற்கு சென்றடையும்.

    வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    • அஜந்தா மேம்பாலத்தை இடிக்கும் பணி நேற்று நள்ளிரவில் தொடங்கியது.
    • மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறுக்கு செல்லும் வாகனங்கள் வி.பி.ராமன் சாலையில் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட வழித்தடங்கள் அமைக்கும் பணிகளுக்காக சென்னை ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள அஜந்தா மேம்பாலத்தை இடிக்கும் பணி நேற்று நள்ளிரவில் தொடங்கியது. எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    2 பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் மேம்பாலத்தை இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேம்பாலம் இடிப்பு பணி காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறுக்கு செல்லும் வாகனங்கள் வி.பி.ராமன் சாலையில் இயக்கப்படுகிறது.

    • பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தற்போதுள்ள வாகன நிறுத்தும் பகுதியில் கூடுதலாக ஒரு தளம் அமைக்கப்படவுள்ளது.
    • ​பயணிகள் அருகிலுள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் பகுதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பயணிகளின் வசதி மற்றும் சீரான வாகன நிறுத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டு, திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தற்போதுள்ள வாகன நிறுத்தும் பகுதியில் கூடுதலாக ஒரு தளம் அமைக்கப்படவுள்ளது.

    இப்பணிகளை மேற்கொள்வதற்காக திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 50 சதவீத வாகனநிறுத்தம் பகுதி வருகிற 20-ந்தேதி முதல் இரண்டு மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகிறது.

    பயணிகள் அருகிலுள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் பகுதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகன பயன்பாட்டாளர்களுக்கு தற்காலிகமாக ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறது என கூறப்பட்டுள்ளது.

    • பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
    • 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால், மெட்ரோ ரெயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால், இன்றும் நாளையும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
    • மெட்ரோ ரெயில் சேவை உடனடியாக சீரமைக்கப்பட்டால் தான் பயணிகள் நிம்மதியடைவார்கள்.

    சென்னை:

    சென்னை விமான நிலையம் முதல் அண்ணா சாலை வழியாக விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் தினந்தோறும் பயணம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது குறிப்பிட்ட இந்த வழித்தடத்தில் ஒற்றை பாதை மெட்ரோ ரெயில் சேவை மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    மெட்ரோ ரெயில் சேவை உடனடியாக சீரமைக்கப்பட்டால் தான் பயணிகள் நிம்மதியடைவார்கள்.

    ஊழியர்கள் மெட்ரோ ரெயில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்தனர். சில மணி நேரங்கள் பிறகு மெட்ரோ ரெயில் சேவை சீரானதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.




    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
    • இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 (திங்கட்கிழமை), 16 (செவ்வாய்க்கிழமை) மற்றும் 17 (புதன்கிழமை) ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    மெட்ரோ ரெயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    ×